Friday, May 7, 2010

ஒரு மீனவரின் புலம்பல்!

கடற்கரை...

பலருக்கு பொழுதுபோக்கு;

அட, உனக்குமா?!

நீ வந்து

பொழுதுபோக்கிய தினமே

டிசம்பர் 26, 2004!




ஜப்பானிய மொழி

கற்பது கடினமாம்...

சுனாமி

எனும் சொல்லை

இனி நான் மறப்பது

அதைவிட கடினம்!




படிப்பறிவு ஏதுமில்லை

மீன்

பிடிப்பறிவைத் தவிர

எங்களுக்கு நாதியில்லை...

நாங்கள்தான்

வேறுவழியில்லாமல்

மீன்பிடித்து வாழ்கிறோம்...

உனக்கென்ன வந்தது?

எங்களைப் பிடிக்க வந்தாய்!




நம்பிக்கையே வாழ்க்கை...

மரணத்தின் மீதுதான்

தினமும் பயணம்...

கட்டுமர(ண)த்தின்மீதுதான்

தினமும் பயணம்!

உறுதியாகத் தெரியாது

அது இறுதிப் பயணமாயென்று!

ஆம்,

நம்பிக்கையே வாழ்க்கை!




தினம்தினம்

வலை வீசுகிறோம்;

ஏனோ

கவலையை வீச முடியவில்லை...

நான்காண்டுகளாகி விட்டது

என் குழந்தைகளைக்

கடலில் தொலைத்து;

இன்றுவரை சிக்கவில்லை

என் வலையில்!




நான் காக்க மறந்த

குழந்தைகளை

உனக்கு இரையாக்கினாய்...

என் வீட்டைக் காக்கும்

இறையாக்கினாய்!

கடல் நோக்கிக்

கும்பிடுகிறேன்...

குழந்தைகள் கூப்பிடும்குரல்

தொலைதூரத்தில் கேட்கிறது!

Saturday, April 17, 2010

தூக்கம் விற்ற காசுகள் …………………

சொந்த தேசத்தில் இருப்பவனுக்கோ அயல்தேசம் வந்து விட ஆசை
அயல்தேசம் வந்தவனுக்கோ திரும்பி சென்று விட ஆசை
இதோ அயல்தேசத்து ஏழைகளின் கண்ணீர் காவியங்களில் ஒரு சில துளிகள்!

விசாரிப்புகளோடும், விசா அரிப்புகளோடும் வருகின்ற
(மின்) அஞ்சல்களை நினைத்து பரிதாபப்படத்தான் முடிகின்றது!
நாங்கள் பூசிக்கொள்ளும் சென்டில் வேண்டுமானால்...
வாசனைகள் இருக்கலாம்! ஆனால் வாழ்க்கையில் இல்லை வசந்தங்கள்...?
தூக்கம் விற்ற காசில்தான்... துக்கம் அழிக்கின்றோம்!
ஏக்கம் என்ற நிலையிலே ... இளமையைக் கழிக்கின்றோம்!

எங்களின் நிலாக்கால நினைவுகளையெல்லாம்...
ஒரு விமானப்பயணத்தினூடே விற்றுவிட்டு
கனவுகள் கல்லறைகளாக புதைந்துவிடுமெனத் தெரிந்தே
கடல் தாண்டி வந்திருக்கிறோம்!

மர உச்சியில் நின்று ஒரு தேன் கூட்டை கலைப்பவன் போல!
வாரவிடுமுறையில்தான்.. பார்க்கமுடிகிறது
இயந்திரமில்லாத மனிதர்களின் கூட்டங்களை!

அம்மாவின் ஸ்பரிசம் தொட்டு எழுந்த நாட்கள் எல்லாம் கடந்து விட்டன!
இங்கே அலாரத்தின் எரிச்சல் கேட்டு எழும் நாட்கள் கசந்து விட்டன!
பழகிய வீதிகள் பழகிய நண்பர்கள் கல்லூரி நாட்கள் என ஒரு இரவு நேர
கனவுக்குள் வந்து வந்து காணாமல் போய்விடுகிறது பழைய நினைவுகள்............!

நண்பர்களோடு ஆற்றில் கொண்ட விறால் பாய்ச்சல், மாட்டுவண்டிப் பயணம்
நோன்புநேரத்துக் கஞ்சி கிட்டிப்புல் கரம் கபடி சீட்டு என
சீசன் விளையாட்டுக்கள் எல்லாம் இறந்த கால நிகழ்வுகளாகிப்போனது!
ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையாய் எதிர்பார்த்து...
விளையாடி மகிழ்ந்த உள்ளுர் உலகக்கோப்பை கிரிக்கெட்!
இவைகளை நினைத்துப்பார்க்கும்போதெல்லாம்...
விசாவும பாஸ்போட்டும் வந்து... விழிகளை நனைத்து விடுகிறது.!

வீதிகளில் ஒன்றாய் வளர்ந்த நண்பர்களின் திருமணத்தில்!
திராஒளன் அடித்து மாப்பிள்ளை அலங்காரம்!
கூடிநின்று கிண்டலடித்தல்! கல்யாண நேரத்து பரபரப்பு!
எல்லாமே கானல் நீராகிப்போனது.......................

பழையசடங்குகளை மறுத்துப்போராட்டம்! பெண்வீட்டார் மதிக்கவில்லை
எனகூறி வறட்டு பிடிவாதங்கள்!
சாப்பாடு பரிமாறும் நேரம்... எனக்கு நிச்சயித்தவளின் ஓரப்பார்வை!
மறுவீடு சாப்பாட்டில் மணமகளின் ஜன்னல் பார்வை!
இவையெதுவுமே கிடைக்காமல் கண்டிப்பாய் வரவேண்டும்
என்ற சம்பிரதாய அழைப்பிதழுக்காக சங்கடத்தோடு...!
ஒரு தொலைபேசி வாழ்த்தினூடே...
தொலைந்துவிடுகின்றது எங்களின் நீ...ண்ட காலத்து நட்பு!

எவ்வளவு சம்பாதித்து என்ன? நிம்மதி இன்றி தவிக்கும்
நாங்கள் அயல்தேசத்து ஏழைகள்தான்! சுதந்திர காற்றை சுவாசிக்க
நாங்கள் நம் தேசம் நாடித்தான் பயணிக்கிறோம்

காற்றிலும், கடிதத்திலும் வருகின்ற சொந்தங்களின்...
நண்பர்களின் மரணச்செய்திக்கெல்லாம்
அரபிக்கடல் மட்டும்தான்... ஆறுதல் தருகிறது!

ஆம், இதயம் தாண்டி பழகியவர்களெல்லாம்...
ஒரு கடலைத்தாண்டிய கண்ணீரிலேயே...
கரைந்துவிடுகிறார்கள்!

இறுதிநாள் நம்மிக்கையில்தான்... இதயம் சமாதானப்படுகிறது!
இருப்பையும் இழப்பையும் கணக்கிட்டுப் பார்த்தால்
எஞ்சி நிற்பது இழப்பு மட்டும்தான்...

பெற்ற குழந்தையின் முதல் ஸ்பரிசம் முதல் பேச்சு...
முதல் பார்வை... முதல் கழிவு... இவற்றின் பாக்கியத்தை
ரியாலும், தினாரும், டாலரும் தந்துவிடுமா?

கிள்ளச் சொல்லி அழும் குழந்தையின் சப்தத்தை...
தொலைபேசியில் கேட்கிறோம்! ஆனால்
கிள்ளாமலேயே நாங்கள் அழும் சப்தம்
யாருக்கு கேட்கும்............................

ஓவ்வொறு முறை ஊருக்கு வரும்பொழுதும்...
பெற்றகுழந்தையின் வித்தியாசப்பார்வை...
நெருங்கியவர்களின்... திடீர்மறைவு இப்படி
புதிய முகங்களின் எதிர்நோக்குதலையும்...
பழையமுகங்களின் மறைதலையும் கண்டு...

மீண்டும் அயல்தேசம் செல்லமறுத்து
அடம்பிடிக்கும் மனசிடம்...
தங்கையின் திருமணமும்... வீட்டு கஷ்டங்களும்...
பொருளாதாரமும் வந்து... சமாதானம் சொல்லி அனுப்பிவிடுகிறது
மீண்டும் அயல்தேசத்திற்கு...